காஷ்மீரில் அண்மையில் புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர் ஷா ஃபேஸல். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காக தனது ஐஏஎஸ் பணியை ராஜிநாமா செய்தார். அப்போது, இங்கு இருக்கும் முறைகளை வெளியே இருந்து அல்லாமல் களத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று ஃபேஸல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் அவர் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியை நிறுவினார்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தேர்தல் அரசியலில் களம் இறங்குவதற்கு முன் நாங்கள் கட்சியை பலப்படுத்துகிறோம்" என்றார்.