முத்தலாக் தடை அவசரச் சட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்ட அந்தஸ்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
முஸ்லிம் சமூகத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறிய போதிலும், ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு போதிய பலமில்லாததால் அங்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் முறையாகப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து இரு முறை அந்த அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக, முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து, கேரளத்தைச் சேர்ந்த சமஸ்தா கேரள ஜாமியாத்துல் உலமா என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அவசரச் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், நாங்கள் இந்த மனுவை விசாரிக்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.