உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, எனது கோரிக்கையின் பேரில் 850 இந்தியர்கள் சவுதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் படோஹியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
"சவுதி அரேபியா இளவரசர் இந்தியா வந்திருந்தபோது, ரம்ஜானுக்கு முன்னதாக சிறைவாசிகளை விடுவிக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார். சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சியே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வைத்துள்ளது. ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆம்புலன்ஸ் ஊழல், கிராமப்புற சுகாதார திட்டத்தில் ஊழல் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு சேவை ஆற்றுவோம். ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்குவோம்.
கட்சிக்கு முன் நாட்டை முன்னிறுத்தவேண்டும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எண்ணம் வேண்டும் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்" என்றார்.