தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் தொடுத்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, கேரவன் இதழின் இணையதளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான கட்டுரையில், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்த பணத்தில் கேமன் தீவுகளில் விவேக் தோவல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தன் மீது சுமத்துவதாக, கேரவன் இதழின் ஆசிரியர், அந்தக் கட்டுரையை எழுதிய செய்தியாளர், அந்தக் கட்டுரையை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் விவேக் தோவல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜெய்ராம் ரமேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால், கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஜெய்ராம் ரமேஷ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்கு அவரது சார்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெய்ராம் ரமேஷுக்கு ஜாமீன் வழங்கியது. முன்னதாக, இதே வழக்கில் கேரவன் இதழின் ஆசிரியர், செய்தியாளர் ஆகியோர் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.