ஆரம்பகாலத்தில் ஊழல்கறை படியாமல் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது இறுதிகாலத்தில் சிலரின் தூண்டுதலால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சத்யபால் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரம்பகாலத்தில் ராஜீவ் காந்தி ஊழல்வாதியாக இல்லை. தனது இறுதிகாலத்தில் சிலரின் தூண்டுதலால் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் அவர் சிக்கினார். இதன் காரணமாகவே நானும், மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் முஃப்தி முகமது சயீதும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஜன மோர்ச்சா கட்சியைத் தொடங்கினோம்.
ராஜீவ் காந்தி அந்த ஊழலில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆரம்பத்தில் அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், பின்னாளில் அவரை சிலர் கட்டுப்படுத்தத் தொடங்கினர். இருந்தபோதிலும், போஃபர்ஸ் ஊழலுக்கு ராஜீவ் காந்தியே முழு பொறுப்பாவார் என்றார் அவர்.
இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தியைக் குறிப்பிட்டு பேசுவது சரியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சத்யபால் மாலிக், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உள்ளிட்டோரைத் தேர்தல் பிரசாரத்தின்போது சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதுபோல, ராஜீவ் காந்தியையும் பிரசாரத்தின்போது குறிப்பிடுவதில் தவறேதுமில்லை. ஒருவேளை ராஜீவ் காந்தியின் மகன் (ராகுல் காந்தி) உங்களைத் திருடன் என்று கூறினால், அவர் யார் என்பது குறித்தும், அவருடைய பரம்பரையின் வரலாறு குறித்தும் அவருக்கு நீங்கள் தெரியப்படுத்த மாட்டீர்களா என்றார் சத்யபால் மாலிக்.