கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு எதிரான தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், அதுதொடர்பான ஆதாரங்கள் என்று கூறி சில புகைப்படங்களுடன் அந்த மூன்று பேர் மீது மீண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி அவர் புகார் மனு அளித்திருந்தார்.
அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மூன்று எம்எல்ஏக்களுக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்குத் தடை கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவரின் மேல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே, பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்குத் தடை கோரி எம்எல்ஏ பிரபு சார்பிலும் செவ்வாய்க்கிழமை மாலையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவரின் மேல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களுடன் இந்த மனுவும் இணைக்கப்படுகிறது என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.