மேற்கு வங்கம்: பாஜக பெண் வேட்பாளர்காரில் ரூ.1.13 லட்சம் பறிமுதல்
மேற்கு வங்கத்தில் கட்டால் தொகுதி பாஜக பெண் வேட்பாளர் பாரதி கோஷின் காரில் இருந்து ரூ.1.13 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பாரதி பணத்தை எடுத்துச் சென்றுள்ளார் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாரதி அரசியலுக்கு வரும் முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் காரில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது குறித்து போலீஸார் கூறியதாவது:
பாஜக வேட்பாளர் பாரதி, தனது காரில் பணத்தை எடுத்துச் செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, மேற்கு மிதுனபுரி மாவட்டம் பிங்லா பகுதியில் வைத்து வியாழக்கிழமை இரவு அவரது காரை சோதனையிட்டோம். அதில் ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அவருடன் மேலும் சிலரும் காரில் இருந்தனர். எதற்காக காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து பாரதியால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
வியாழக்கிழமை இரவு 3 மணியளவில் பாரதியின் காரில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு சுமார் 3 மணி நேரம் அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த போலீஸார் பின்னர் விடுவித்தனர்.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, எனது தனிப்பட்ட செலவுகளுக்காக காரில் பணம் வைத்திருந்தேன். அதில் எனது பணம் ரூ.50,000 மட்டும்தான். எனது பிரசார ஒருங்கிணைப்பாளர், அவரது செலவுக்காக ரூ.49,000 வைத்திருந்தார். காரின் ஓட்டுநரிடம் ரூ.13,000 இருந்தது. இந்தப் பணத்தைதான் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். என்னிடம் இருந்த பணம் எப்போது வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமும் இருக்கிறது. மற்றபடி திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டுவதுபோல வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார்.