நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 0.1 சதவீதமாக குறைந்து போனது. இது, கடந்த 21 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உற்பத்தித் துறையில் காணப்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய 21 மாதங்களில் காணப்படாத மிகக் குறைந்த அளவாகும்.
நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் 2017 ஜூன் மாதம் 0.3 சதவீதமாகக் இருந்ததே, இதுவரை மிகக் குறைந்த அளவாக இருந்து வந்தது. வருடாந்திர தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிங்களை ஒப்பிடும்போது, 2017-18-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த அது, கடந்த நிதியாண்டில் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி விகிதத்தை கணக்கிடுவதில் 77.63 சதவீத பங்களிப்பை வழங்கும் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம் 0.4 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது. இத்துறை, 2017 மார்ச் மாதத்தில் 5.7 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தது.
இந்த மாதத்தில், மூலதனப் பொருள்களின் உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. எனினும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது 3.1 சதவீதமாக இருந்தது. சுரங்கத் துறையின் வளர்ச்சி விகிதம் 3.1 சதவீத்திலிருந்து குறைந்து 0.8 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
அதேபோன்று, மின்துறையின் உற்பத்தியும் 5.9 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைந்தது என மத்திய புள்ளியியல் அலுவகம் தெரிவித்துள்ளது.