தில்லியில் 111 வயதுடைய பச்சன் சிங் தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இது குறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "வயது என்பது வெறும் எண்கள்தான்' என்றார்.
பச்சன் சிங் திலக் விஹார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு வரை வாக்குச் சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த முறை தேர்தல் அதிகாரிகளுடன் காரில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அதன் பிறகு, சக்கர நாற்காலியில் வாக்குசாவடிக்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அவர் படுக்கையில் கிடந்தார். முன்புபோல் பேச முடியாவிட்டாலும், வாக்களிப்பதன் அவசியத்தை அவர் உணர்ந்துள்ளார். எனினும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருப்பதும், அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருப்பதும் அவருக்குத் தெரியவில்லை.
இது குறித்து அவரது இளைய மகன் ஜஸ்பீர் சிங் (63) கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி இருப்பதுகூட அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவும், காங்கிரஸும் போட்டியிடுவது மட்டுமே அவருக்குத் தெரியும். எனது தந்தை 1951-இல் இருந்து தனது வாக்கை ஒவ்வொரு தேர்தலிலும் பதிவு செய்வததைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தான் வாக்களித்துவிட்டுச் செல்வார். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கமாட்டார். அவரே சமைத்துக் கொள்வார். குருத்வாராவில் பெரும்பாலும் சேவையாற்றுவார் ' என்றார்.
அவரது குடும்பத்தினர் கூறுகையில், "முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்காக பாரம்பரியமாகவே நாங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து வந்தோம். ஆனால், தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றொரு வாய்ப்பு தரப்பட வேண்டும் என நினைக்கிறோம்' என்றனர்.