ஹிந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து. அவர் நாதுராம் கோட்சே என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் பேசியிருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் மோடி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி சேனலுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
எனக்குத் தெரிந்தவரையில் எனது கலாசாரத்தில், ஹிந்துவாக இருப்பவர் யாரும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால் அவர் நிச்சயமாக ஹிந்துவாகவும் இருக்க முடியாது என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு ஹிந்து பயங்கரவாதம் என்ற கருத்தைப் பரப்பி வருகிறது. இதன் மூலம் ஹிந்து பாரம்பரியத்தின் மீது அவதூறை காங்கிரஸ் பரப்பி வருகிறது. இந்த பாவத்துக்கான தண்டனையில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது என்றார்.