தலாக் என்று கூறி விவாகரத்து செய்ய முயன்ற கணவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளனர்.
முஸ்லிம் பெண் சார்பில் வழக்குரைஞர் எம்.எம்.காஷ்யப் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மனுதாரருக்கும், அவரது கணவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் தலாக் கடந்த மார்ச் 25ஆம் தேதியிலும், இரண்டாவது தலாக் மே 7ஆம் தேதியிலும் இவரது கணவர் அளித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனது கணவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்று வழக்குரைஞர் தெரிவித்தார்.