தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வருவது தொடர்பான முயற்சியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உருவாகும் மகா கூட்டணிக்கு சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மட்டுமல்லாது, பாஜகவை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) தலைவர் சரத் யாதவ் ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் தில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவை சனிக்கிழமை சந்தித்தார்.
இதையடுத்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இல்லத்துக்கு சென்று, அவருடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தேர்தலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.