மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநிலத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உள்ள பாஜக வலியுறுத்தியுள்ளது. இதற்கு ஏதுவாக, சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை விரைவில் கூட்ட வலியுறுத்தி, ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு பாஜக திங்கள்கிழமை கடிதம் எழுதியது.
மே 23-இல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பாஜகவின் இந்த நகர்வு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்த காங்கிரஸ்: 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், 114 இடங்களில் காங்கிரஸூம், 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், ஓரிடத்தில் சமாஜவாதி, 4 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மைக்கு மேலும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். இதன் மூலம், அந்த மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆளுநருக்கு கடிதம்: இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் வலுவற்ற காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மாநில மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதாக கூறி, மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு பாஜக திங்கள்கிழமை கடிதம் எழுதியது. சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா எழுதியிருக்கும் அக்கடிதத்தில், "காங்கிரஸ் அரசின் நிலைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. எனவே, சட்டப் பேரவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காகவும், மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காகவும் பேரவை சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "சட்டப் பேரவையில் விவாதத்தின்போது வாக்கெடுப்பு கோரப்படும். அதில் அரசு தோல்வியுறும்பட்சத்தில், காங்கிரஸ் அரசு கவிழும்' என்றார்.
புதிய உற்சாகம்: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இது, பாஜகவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த லோகேந்திர சிங் ராஜ்புத், கடந்த மாதம் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸில் இணைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மறுஆய்வு செய்வேன் என்று கூறினார். எனினும், அந்தப் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டதாக, முதல்வர் கமல்நாத் பின்னர் தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: கமல்நாத்
சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து, எங்களுக்கு இடையூறு ஏற்படுத்த பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதுவரை 4 முறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். அவர்கள் மீண்டும் விரும்பினால், மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம்' என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மத்தியப் பிரதேச பொறுப்பாளருமான தீபக் பாபரியா கூறுகையில், "முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அது மக்கள் அளித்த தீர்ப்பு. அதனை மாற்ற முயன்றால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்றார்.
அமைச்சரவையை விரிவாக்க முடிவு?
மாநில அரசை வலுப்படுத்தும் வகையில், பகுஜன் சமாஜ், சமாஜவாதி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கமல்நாத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் தற்போது 25 அமைச்சர்கள் உள்ள நிலையில், அமைச்சரவையில் மேலும் 9 பேரை இணைக்க முடியும். இதனால், மாநில அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.