ஆந்திரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸýம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதுமட்டுமன்றி அந்த மாநிலத்தில் நோட்டாவை விட இரு கட்சிகளும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளன.
ஆந்திரத்தில் உள்ள 175 பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியால், 3 மக்களவைத் தொகுதிகளிலும், 23 பேரவை தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸýம், பாஜகவும் தனித்து போட்டியிட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 1.17 சதவீத வாக்குகளையும், பாஜக, 0. 84 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 4,01,969 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் 1. 28 சதவீதமாகும்.
மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெறும் 1. 29 சதவீத வாக்குகளையும், பாஜக, 0.96 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 1. 49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 2. 77 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. இந்த முறை அதிலும் குறைந்து, நோட்டாவை விட காங்கிரஸ் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 2.18 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், 4 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை பாஜக பல மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றாலும், ஆந்திரத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.