பிரதமர் மோடியின் வெற்றிக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உள்ளார்.
இதையடுத்து, உலகத் தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
திபெத் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவின் தர்மசாலாவில் வசித்து வரும் புத்த மத துறவியும், ஆன்மிகத் தலைவருமான தலாய்லாமா விடுத்துள்ள வாழ்த்து செய்தி:
இந்திய மக்களின் எண்ணங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் நம்பிக்கையுள்ளவராக திகழும் தாங்கள் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்து இந்த வெற்றியை பெற்றுள்ளதற்காக தங்களை வாழ்த்துகிறேன்.
இந்தியா பழைமையும், பெருமையும் வாய்ந்த நாடு. அஹிம்சை, கருணை, தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, வன்முறையை போதிக்காத, இரக்க குணம் கொண்ட நாடு.
எப்போதும், இந்தியாவின் மீது திபெத்தியர்கள் பெரும் மரியாதையையும், அவர்களது கலாசாரத்தை போற்றுபவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்குகின்றனர். 8ஆவது நூற்றாண்டிலேயே நாளந்தா பல்கலைக்கழகம் மூலமாக திபெத்தியர்களின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரமாக திகழ்ந்த பாரம்பரியம் மிக்கவர்கள் இந்தியர்கள் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.