16ஆவது மக்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மக்களவையை கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கியிருந்தது. இந்த ஆலோசனையை ஏற்று, 16-ஆவது மக்களவையை கலைப்பது தொடர்பான உத்தரவில் குடியரசுத் தலைவர் சனிக்கிழமை கையெழுத்திட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி, அவரது மத்திய அமைச்சரவை ராஜிநாமா செய்வது தொடர்பான முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஏற்றார். அதேபோல், புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடரும்படி பிரதமர் நரேந்திர மோடியை ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார்.