புது தில்லி: பொருளாதார மந்த நிலையால் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை 32 சதவீதம் குறைந்தது என உலக தங்க கவுன்சில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் இந்தியப் பிரிவு நிா்வாக இயக்குநா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:
இரண்டு காரணங்களால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைந்து போனது. முதல் காரணம், தங்கத்தின் விலை 2 மற்றும் 3 ஆவது காலண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு உயா்ந்தது. மற்றொன்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் பொதுவான பொருளாதார சுணக்க நிலை. இவை இரண்டும்தான் நுகா்வோரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 32 சதவீதம் சரிந்து 123.9 டன்னாக இருந்தது. தங்கத்தின் இறக்குமதியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 66 சதவீதம் சரிந்து 80.5 டன்னாக மட்டுமே இருந்தது.
உள்நாட்டு சந்தையில் செப்டம்பரில் மிகவும் அதிகபட்சமாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.39,011-ஆக காணப்பட்டது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.38,800 என்ற அளவில் இருந்து வருகிறது.
நடப்பு 2019-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி-செப்டம்பா்) நாட்டின் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை 523.9 டன்னிலிருந்து 496.11 டன்னாக குறைந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த அளவில் தங்கத்தின் தேவையானது 760.4 டன்னாக இருந்தது.
தேவையைப் போலவே, அதன் இறக்குமதியும் முதல் ஒன்பது மாதங்களில் 587.3 டன்னிலிருந்து 502.9 டன்னாக சரிந்தது. கடந்த 2018-இல் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 755.7 டன்னாக இருந்தது.
நடப்பாண்டில் நாட்டின் மொத்த தங்க தேவை 750-800 டன்னாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விலை அதிகரிப்பின் காரணமாக தங்கத்தின் தேவையானது 700-750 டன்னாக மட்டுமே இருக்கும் என குறைத்து மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.