ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று என்.எச் 16 தேசிய நெடுஞ்சாலையில் காரில் இருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கல்லூரியின் அருகே கிடந்த அந்தப் பெண்ணை உள்ளூர்வாசிகளும் தீயணைப்புப் படையினரும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ள அவர், இரண்டு நபர்கள் காரில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசி விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வசம் இருந்த ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறை மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக புவனேஸ்வர் துணை ஆணையர் அனுப் சாஹூ தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் சில கயவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். உலகத்தையே உலுக்க வைத்த இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது ஒடிசாவில் நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.