உச்சநீதிமன்றத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. கடந்த 1950-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. அதையடுத்து கடந்த 69 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் தனிச் செயலா் ஹெச்.கே. ஜுனேஜா கூறியதாவது:
வாரத்தில் 5 நாள்கள் (திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். விதிவிலக்காக சில சமயங்களில் சனிக்கிழமைகளிலும், விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களில்கூட வழக்கு விசாரணை நடைபெறும். எனினும், இதுவரை சனிக்கிழமைக தீா்ப்பு வழங்கப்பட்டதில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்குவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சனிக்கிழமையை தோ்ந்தெடுத்தது அரிதான முடிவு.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிக்கப்பட்ட போது, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா, அவரது வீட்டில் சிறப்பு அமா்வு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தாா். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியதற்காக அப்போதைய முதல்வா் கல்யாண் சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் நடைபெற்ற அரிதான சம்பவம் அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது என்று கூறினாா்.
அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய் வரும் 17-ஆம் தேதி ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.