விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளதாவது:
விலையை கட்டுப்படுத்த ஏதுவாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வது என அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, எம்எம்டிசி நிறுவனம் வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு சந்தைகளில் தாராளமாக வெங்காயம் கிடைக்கும் வகையில் பகிர்வு பணிகளை மேற்கொள்ளவும் அந்நிறுவனம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி எம்எம்டிசி நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை நாடு முழுவதும் விநியோகிக்க "நாபெட்' கூட்டமைப்புக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பாஸ்வான் அந்த சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.
வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை காரணமாக அதன் உற்பத்தி 30-40 சதவீதம் வரை சரிவடைந்தது. இதனால், சந்தையில் வரத்து குறைந்து ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.