புதுதில்லி: புல் புயலில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று ‘புல் புல்’ புயலாக உருவானது. இந்த புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலோர மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது.
இதனால் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 12 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று வடக்கு வங்க விரிகுடா பகுதிக்கும் அடுத்த 18 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், புல் புல் புயல் மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சேதங்களின் நிலைமையை ஆய்வு செய்துள்ளேன்.
இந்த புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் மீட்பு நிலைமை குறித்துது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன். அவரிடம் மத்திய அரசால் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளேன். ஒவ்வொருவரின் பாதுகாப்பு மற்றும் நலத்திற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.