புது தில்லி/ லண்டன்: இந்தியாவில் அடைக்கலம் தந்து உதவுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் (எம்கியூஎம்) நிறுவனர் அல்தாஃப் ஹுசைன், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்டு லண்டனில் வசித்து வரும் அவர் பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் எனக்கும் எனது சகாக்களுக்கும் புகலிடம் அளிக்க பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்தால் நாங்கள் அங்கு வருவதற்கு தயாராக உள்ளோம். ஏனெனில் எனது தாத்தாவும், பாட்டியும் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளனர். என்னுடைய ஏராளமான உறவினர்களும் இந்தியாவில்தான் சமாதி ஆகியுள்ளனர். எனவே, அவர்களை நான் வணங்க கட்டாயம் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்.
அது முடியாதபட்சத்தில், என்மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளதை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்று நீதி பெறத் தேவையான நிதி உதவிகளையாவது பிரதமர் மோடி வழங்க வேண்டும்.
நான் ஒரு அமைதி விரும்பி. எந்த அரசியலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். எனவே, எனக்கும் எனது சகாக்களுக்கும் இந்தியாவில் வாழ இடம் தந்து பிரதமர் மோடி உதவிட வேண்டும் என்றார் அவர்.