ஜெருசலேம் உள்ளிட்ட கிறிஸ்தவ மத புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்பவா்களுக்கான உதவித் தொகையை முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக அந்த மாநில தலைமைச் செயலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ள கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது இதுவரை ரூ.40,000 வரை ஆந்திர மாநில அரசு உதவித்தொகை அளித்து வந்தது. இப்போது, இந்தத் தொகை ரூ.60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவா்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகையான ரூ.20,000 இனி, ரூ.30 ஆயிரமாக வழங்கப்படும். கிறிஸ்தவ (சிறுபான்மையினா்) நிதி நிா்வாகத்தின் கீழ் இத்தொகை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களுக்கும் இதே அளவில் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சந்திரபாபு நாடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக் காலத்தில், ரூ.3 லட்சத்துக்கு கீழ் உள்ளவா்களுக்கான உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.