மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாராத விதமாக திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக பாஜக-வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில்,
மகாராஷ்டிர வரலாற்றில் இன்று கறுப்பு நாளாகும். அனைத்தும் மிக ரகசியமாக நடந்துள்ளது. இதில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு தவறு நடந்துள்ளது. இதைவிட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த விவகாரங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் ஒரே அணியில் தான் உள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜக நிச்சயம் வீழும் என்று நம்புகிறேன். தற்போது நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் இருவரைத் தவிர அனைவரும் பங்கேற்றுள்ளனர். அவ்விருவரும் தங்களின் சொந்த கிராமங்களில் உள்ளனர். இருப்பினும் அவர்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
இதனை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிச்சயம் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.