மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் இன்று திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் 2-ஆவது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர். ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸுக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் அகமது படேல், மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம். பா.ஜ.க. அனைத்து நிலைகளையும் கடந்து விட்டது. ஜனநாயகத்திற்கு இது மிகப் பெரிய அவமானம். ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரசால் எந்த தாமதமும் ஏற்படவில்லை. ஆட்சி அமைப்பதற்கு உண்டான எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க காரணம் என்ன? அனைவரும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்போம். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பா.ஜ.க.வைச் சந்திப்போம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.