புது தில்லி: மகாராஷ்டிரா விவகாரத்தால் கூச்சல் குழப்பம் நிலவிய சூழ்நிலையில் மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பதால் வாபஸ் பெறுவதாக அரசுத் தரப்பில் அதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா விவகாரத்தால் கூச்சல் குழப்பம் நிலவிய சூழ்நிலையில் மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்களன்று அவையில் இதனை தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின்படி , ' முன்னாள் பிரதமர்கள் குடும்பத்தினருக்கு இனி எஸ்.பி.ஜி பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. இனி எஸ்.பி.ஜி பிரிவினர் பிரதமருக்கான் பாதுகாப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வார்கள். முன்னாள் பிரதமர்களுக்கு வேண்டுகோளின் பேரில் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆராய்ந்து பாதுகாப்பு வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.