புது தில்லி: பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி சாத்வி பிரக்யாவுக்கு நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க தடை கோரி, 50 காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவு திருத்த மசோதா மீது புதன்கிழமை நடந்த விவாதத்தின்போது, தான் ஏன் மகாத்மா காந்தியை கொன்றேன் என்பது குறித்த கோட்சேவின் கருத்தை திமுக எம்பி ஆ. ராசா மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பாஜகவின் பிரக்யா தாகுர், "ஒரு தேச பக்தரை நீங்கள் உதாரணமாக அளிக்க முடியாது" என்றார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரக்யா தாகுரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக எம்பி-க்களும் பிரக்யா தாகுரை அமைதி காக்குமாறு வலியுறுத்தினர்.
இதன்பிறகு பேசிய ஆ. ராசா, அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டே பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களைக் கொண்டு அல்ல என்று கூறி மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி சாத்வி பிரக்யாவுக்கு நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க தடை கோரி, 50 காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் தங்களது கடிதத்தில் கோட்சேவை தேசபக்தர் என்று குறிப்பிட்ட விவகாரத்தில் பிரக்யா மன்னிப்பு கூறும் வரை, அவருக்கு நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
முன்னதாக பிரக்யா சிங் தாகூர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா தாகூரை நீக்குமாறு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா பரிந்துரை செய்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.