சரியான கல்வி முறை தான் சமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆர்எஸ்எஸ் நிறுவன தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தகவல் தொழில்நுட்பு நிறுவனமான ஹெச்சிஎல்-லின் நிறுவனர் சிவ நாடார் தெரிவித்தார்.
விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் சார்பில் நிறுவன தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி அன்று நிறுவன தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவ நாடார் பேசுகையில்,
நமது தேசத்தில் சரியான கல்வி முறையின் மூலமாகத் தான் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் நமது நாட்டில் 600 மில்லியன் மக்கள் தொகை உள்ளதால் இந்த முறை முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக நமது மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைவானவர்கள்.
வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பாக நமது நாட்டில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இருப்பினும் சுமார் 266 மில்லியன் மக்களுக்கு இங்கே கல்வி அறிவு கிடையாது. அதுதான் இங்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற விழிப்புணர்வு பலருக்கு ஏற்படுவதில் சிக்கல் உள்ளது.
ஒருவருக்கு கல்வி அறிவு கிடைத்தால், அவர்கள் பொதுவாகவே அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு அரசால் மட்டும் எதுவும் செய்துவிட முடியாது. இதில் தனியாரின் பங்களிப்பும் முக்கியமாகிறது.
ராவணனை ராமன் வீழ்த்திய இந்த தசரா திருநாளில் அதர்மத்தை தர்மம் வீழ்த்தியது போன்று நமது நாடும் அனைத்து தடைகளையும் தகர்த்து மேன்மை பெற வேண்டும். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு முடிவு கிடையாது. தொடர்ந்து கடினமாக உழைத்து இனியும் ஏற்படும் அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்து வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்தார்.