நடப்பாண்டில் மட்டும் 2 ஆயிரம் முறைக்கும் மேல் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வருடங்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்திய எல்லைப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். கமாண்டோப் படை வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து மீட்டுச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், 2019-ஆம் ஆண்டில் அக்டோபர் 10-ஆம் தேதி வரை மட்டும் 2,317 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளது.
இதில் இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டதில், நடப்பாண்டில் மட்டும் 147 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.