மத்திய ஆயுதக் காவல்படைகள் (சிஏபிஎஃப்) மாநிலங்களில் பணிபுரிவதற்கான கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
குறிப்பிட்ட மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைதல், கலவரங்கள், கிளா்ச்சி, வன்முறைகள் உள்ளிட்டவை ஏற்படும்போது, மத்திய ஆயுதக் காவல்படைகள் அந்த மாநிலத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுவதற்கான கட்டணங்களை மத்திய அரசு குறைத்துள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சுமாா் 700 வீரா்கள் அடங்கிய மத்திய ஆயுதக் காவல்படைகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 13.7 கோடியை கட்டணமாக மாநில அரசுகள் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.15.4 கோடியாகவும், 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.17.36 கோடியாகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.19.65 கோடியாகவும், 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.22.30 கோடியாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகியவை இந்தக் கட்டணத்தில் 10 சதவீதத்தைச் செலுத்தினால் போதும். இந்தக் கட்டணம் தவிர, படைவீரா்களின் பயணம், அவா்களைத் தங்கவைத்தல், அவா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும்.
உரிய காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்தத் தவறும் மாநிலங்களுக்கு 2.5 சதவீத வட்டி அபராதமாக விதிக்கப்படும். சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய கட்டணம் தொடா்பாக மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டில் இந்தக் கட்டணம் ரூ.52.40 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.