தண்டனைக் காலம் முழுவதும் முடிவடைந்த பின்னரே, சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநர் விளக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று வரும் சசிகலாவின் தண்டனைக் காலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
சசிகலா சிறை சென்றது முதலே அவரைப் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சிறையில் அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது சர்ச்சைக்குள்ளானது.
சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, 4ல் 3 பங்கு தண்டனைக் காலத்தை அனுபவித்த பிறகு, நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படும் வசதி இருக்கிறது.
அதன்படி, சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவின. இந்த நன்னடத்தை விதிகளின்படி, சிறைத்துறை கர்நாடக அரசுக்கு வழங்கியுள்ள விடுதலை செய்யப்படுபவர்கள் பட்டியலில் சசிகலாவின் பெயரும் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகலாவின் விடுதலை குறித்து பெங்களூரு சிறைத் துறை நிர்வாக இயக்குனர் மெக்ரித் தகவல் வெளியிட்டுள்ளார். அவர், 'கர்நாடக சிறைத்துறை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது. தண்டனைக் காலமான 4 ஆண்டுகள் முடிவடைந்த பிறகே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.