திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்: மேற்கு வங்க பாஜக தலைவர்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் கட்சி மாற விருப்பம் தெரிவிப்பதாகவும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். 
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்: மேற்கு வங்க பாஜக தலைவர்


திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் கட்சி மாற விருப்பம் தெரிவிப்பதாகவும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சப்யாசச்சி தத்தா கிளப்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் உட்பட பல பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 

இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் குறித்து பேசிய திலிப் கோஷ், "ஒவ்வொரு நாளும் திரிணமூல் தலைவர்களும், நிர்வாகிகளும் பாஜகவில் இணைகின்றனர். சுமார் 8 திரிணமூல் எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் எப்போது இணைகிறார்கள் என்று பார்ப்போம்" என்றார். 

இதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய திரிணமூல் தலைவரும், அமைச்சருமான ஜோதிபிரியோ முல்லிக், "பாஜகவை வழிநடத்த அவர்களிடம் தலைவர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் எங்களது கட்சித் தலைவர்களையும், நிர்வாகிகளையும் இணைத்து வருகின்றனர்" என்றார். 

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்பிறகு, 7 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் என பலர் பாஜகவுக்கு கட்சி மாறியுள்ளனர்.

2021-இல் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மேலும் 8 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com