சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்க: சிபிஐ மனு
புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். நீதிமன்ற நடைமுறையில் சிதம்பரத்துக்கு சாதகமாக உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பரபரப்பான சூழலில், ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காவல் முடிந்தவுடன் சிதம்பரத்தை திங்களன்று ஆஜர்படுத்த நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து நாள் சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, சிதம்பரத்துக்கு 4 முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.