ஹைதராபாதில் மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத், ராஜேந்திரா நகரில், பி.வி. நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ் சாலை மேம்பாலம் அருகே மர்மப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது.
இந்நிலையில், அப்பெட்டியை திங்கள்கிழமை அவ்வழியாகச் சென்ற அலி (35) என்பவர் எடுத்து திறக்க முயன்றார்.
அப்போது அப் பெட்டியில் இருந்த பொருள் வெடித்துச் சிதறியது. இதில், அலி பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அலி உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சிப்பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.