நாட்டில் உள்ள மிக முக்கியமான 400 ரயில் நிலையங்களில் மண் குடுவையில் தேநீர் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) தலைவர் வினய் குமார் சக்úஸனா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு முறை பிளாஸ்டிக்கை வழக்கத்திலிருந்து அறவே ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். அவரின் இந்த எண்ணத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக, நடப்பாண்டு கே.வி.ஐ.சி. மின்சாரத்தில் இயங்கும் 30,000 மண்பாண்டங்களை தயாரிக்கும் சக்கரங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம், 2 கோடி மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியும். இதைத் தவிர, தினசரி பயன்பாட்டுக்கான இதர சுடுமண் பாத்திரங்களையும் அந்த இயந்திரத்தின் மூலம் தயாரிக்கலாம்.
பயன்பாட்டுக்குப் பிறகான மண்பாண்டங்களின் மறுசுழற்ச்சிக்காக அரவை இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன. இதற்கான நடைமுறைகள் இன்னும் 15 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக நாடெங்கிலும் உள்ள மிக முக்கிய 400 ரயில் நிலையங்களில் மண் குடுவைகளில் தேநீர் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதைத்தவிர, உணவு மற்றும் சிற்றுண்டி போன்றவற்றுக்கும் மண்பாண்டங்களே பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான சுற்றறிக்கை ரயில் அமைச்சகம் சார்பில், சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சுற்றுச்சூழல் அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. இதில், 13,000-14,000 டன் மட்டுமே திரும்ப சேகரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நொறுக்கி அழிக்கும் இயந்திரங்களை 407 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுவிட இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.