பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக வருவாய் துறை ஆணையர் நீரஜ் சிங்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ரோஸ் வேலி சீட்டு நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக நீரஜ் சிங் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதனால், அவரை அந்த மாநில காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன் மூலமாக, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீரஜ் சிங் பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதையடுத்து, கொல்கத்தா, மும்பை, பாட்னா ஆகிய நகரங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அந்த இடங்களில் இருந்து பல சொத்துகளின் ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், முதலீட்டு ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அதனடிப்படையில், அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.