ஒடிஸாவில் மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக, கடந்த 10 நாள்களில் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் பி.கே. சர்மா புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாநில காவல் துறையினர் முடிவெடுத்தனர். இதையடுத்து, கடந்த 10 நாள்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 426 பேரைக் கைது செய்துள்ளோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 141 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரின் மீதும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் நிகழும் விபத்துகளைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என்றார் பி.கே. சர்மா.