இந்தியாவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு, பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் (76) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இரு தலைமுறைகளாக தனது நடிப்பால் நம்மை மகிழ்வூட்டி, உத்வேகப்படுத்தி வரும் திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சன், நிகழாண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஒட்டுமொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்ச்சியடைந்துள்ளது. அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
கடந்த 1970-களில் ஹிந்தி திரையுலகில் பிரபலமாக தொடங்கிய அமிதாப் பச்சன், சஞ்ஜீர், தீவார், ஷோலே உள்ளிட்ட படங்களின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்தார். பின்னர், ஹிந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த அவர், தொலைக்காட்சியில் "கௌன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.
தனது 50 ஆண்டு கால திரைப்பயணத்தில், 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996-ஆம் ஆண்டிலும், இயக்குநர் கே.பாலசந்தர் 2010-ஆம் ஆண்டிலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.