திருமலையில் அத்திவரதர் சிலை
திருமலையில் தொடங்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கண்களைக் கவரும் விதமாக காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
திருமலையில் வரும் செப். 30-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களைக் கவர தேவஸ்தான தோட்டக்கலை சார்பில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு புதிய முறையில் ஏற்பாடு செய்து, ஊழியர்கள் மலர் கண்காட்சியில் சிற்பங்களை அமைத்து வருகின்றனர். பல புராண, இதிகாச நிகழ்வுகளை விளக்கும் சிற்பங்கள் இவற்றில் அடங்கும்.
அதன்படி, இந்தாண்டு காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் சிலாரூபம் வண்ண மின்விளக்குகளுக்கிடையில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி 2059-ஆம் ஆண்டு மட்டும் அத்திவரதர் தரிசனம் அளிக்க உள்ளார். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நிலவறைகள் திறக்கப்பட்டபோது, அப்போதைய பிரம்மோற்சவத்தில் அந்த வடிவமைப்பு பக்தர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த வடிவமைப்பும், கருடகமன கோவிந்தா என்ற பெயரில் பெங்களூரு சகோதரிகள் ஏற்படுத்தி வரும் மணற்சிற்பமும் பக்தர்களிடம் தனி வரவேற்பைப் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.