ஜம்மு-காஷ்மீரிலுள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்ஐடி) அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அந்த மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமலிருக்க ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
இதையடுத்து, பள்ளிகள், ஸ்ரீநகரிலுள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் உள்ளிட்டவை மூடப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு தவிர மற்ற பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அச்சம் காரணமாக குழந்தை
களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறைச் செயலர் ஆர். சுப்ரமணியம் சனிக்கிழமை தெரிவித்தார்.