தலைவருடன் சென்ற தொண்டர்கள் மீது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்திய விடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவை இணைந்து நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேசம், எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்தார். ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகமும், போலீஸாரும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸார் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.