சிறையிலுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விதிமுறைகளுக்குப் புறம்பாக சிறையில் இருந்து தொலைபேசியில் உரையாடுவதாக எழுந்த புகாரையடுத்து, அவரது அறையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி சிறையில் இருந்து வருகிறார்.
தற்போது, உடல்நலக்குறைவால் ராஞ்சியிலுள்ள ஆர்ஐஎம்எஸ்மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சிறையிலுள்ள லாலு பிரசாத் கட்சியினருடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் தொலைபேசி மூலம் உரையாடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, லாலு பிரசாத் தங்கியிருந்த சிறையில், சிறைத்துறை அதிகாரி பிர்ஸா முண்டா தலைமையில் சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறை டிஎஸ்பி தீபக்குமார் பாண்டே கூறியதாவது:
சிறைத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை சோதனை ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றார்.
இதுகுறித்து ஆர்ஜேடி கட்சியின் ஜார்க்கண்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். லாலு பிரசாத் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி, நிதீஷ் குமார் கூறிய புகார் பொய்யானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பாட்னாவில் இருக்கும் நிதீஷ் குமார், எப்படி இதுபோன்று உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகிறார் என்பது வியப்பாக உள்ளது என்றார்.