அரசியல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீது வெள்ளிக்கிழமை (ஏப்.5) விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு உள்பட பல்வேறு தரப்பினர் மனுக்களை தொடுத்துள்ளனர். அந்த மனுக்களில், மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வால் புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அப்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் கூறுகையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன. உரிய அமர்வு முன்பு மனுக்கள் மீதான விசாரணை வரும் 5ஆம் தேதி நடைபெறும் என்றனர்.