புது தில்லி: இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் படை என்று கூறிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் பேச்சு குறித்து அவர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. இனி வரும் காலங்களில் யோகி ஆதித்யநாத் இதுபோன்று இந்திய ராணுவத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறோம். இதனை எதிர்காலத்திலும் அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
எனினும், தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் இது பற்றி கூறுகையில், இந்திய ராணுவம் என்பது இந்தியாவுடையது. அதனை யாராவது மோடியின் படை என்ற கூறினால் அவர் தேசத் துரோகியாகக் கருதப்படுவார் என்று காட்டமாகவே தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.
இந்திய ராணுவத்தை மோடியின் படை என்று வர்ணித்த யோகி ஆதித்யநாத் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.