தேசியம் தான் பாஜக-வின் தாரக மந்திரம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கு 'சங்கல்ப பத்திரம்' என்று பெயரிட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, நாடு சுதந்திரம் அடைந்த 100-ஆவது ஆண்டு விழாவின்போது 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மற்றுவது தான் பாஜக-வின் ஒரே இலக்கு.
இதற்கான 75 முக்கிய வாக்குறுதிகள் இந்த சங்கல்ப பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் வறுமையை ஒழிக்க போராடுவோம். முதலில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்வோம்.
ஏனெனில் மக்களின் மனங்களின் குரலே பாஜக-வின் தேர்தல் அறிக்கையாக இடம்பெற்றுள்ளது. இந்தியா நிச்சயம் வளரும் நாட்டில் இருந்த வளர்ந்த நாடாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேசத்தின் வளர்ச்சி ஒன்றுபட்டதாக இருக்கும். தேசியம் தான் பாஜக-வின் தாரக மந்திரம் என்று தெரிவித்தார்.