91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே (25), மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாக்பூர் தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜோதி கூறியதாவது:
அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எனவே அனைவரும் முதலில் வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையாற்றுங்கள், பின்னர் உங்களது சொந்த வேலைகளுக்குச் செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
மொத்தம் 2 அடி 1 அங்குலம் (63 செ.மீ.) உயரமுடைய ஜோதி, உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் சுயதொழில் முனைபவர், பிக்பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றவர், அமெரிக்க மற்றும் இத்தாலிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர், புணேவிலுள்ள லோனாவாலே அருங்காட்சியகத்தில் தனக்காந மெழுகுச் சிலை கொண்டவர் போன்ற பல சிறப்பம்சங்களுக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.