கடும் இடர்பாடுகளைத் தாண்டி நாட்டின் உச்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அருணாச்சலப் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டிலேயே மிக உயரிய இடத்தில் தேர்தல் நடைபெற்ற பகுதி என்ற பெருமை அம்மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள லுகுதங் - முக்தோ சட்டப்பேரவைத் தொகுதிக்கான லுகுதங்க் கிராமத்தின் வாக்குப்பதிவு 13 ஆயிரத்து 583 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடத்தப்பட்டது.
கடும் இடர்பாடுகளைத் தாண்டி மக்கள் வாக்களிக்க வசதியாக இங்குள்ள வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று பார்வையிட சுமார் 2 நாட்கள் ஆனதாக தேர்தல் அதிகாரி ஷேய்பாலி ஷரன் தெரிவித்தார். மொத்தம் 7,98,249 வாக்காளர்கள் உள்ள அம்மாநிலத்தில் 2,202 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.