ஆயுதப் படைகளின் சாதனைகள், அரசியல் விவகாரங்களுக்கு பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்திருப்பதுடன், அவர்களது அரசியல் சாரா தன்மையை காக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
ஏப்ரல் 11-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர்கள் 8 பேரின் பெயர்களும், முன்னாள் ராணுவத்தினர் 150 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஆனால், அவர்களில் முன்னாள் ராணுவத் தளபதி எஸ்.எஃப்.ரோட்ரிகஸ், விமானப்படையின் முன்னாள் தளபதி என்.சி.சூரி ஆகிய இருவரும், அந்தக் கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ராணுவ முன்னாள் துணைத் தளபதி எம்.எல்.நாயுடு, அந்தக் கடிதத்தில் தன்னுடைய பெயர் சேர்க்கப்படுவதற்கு முன் தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என்று தெரிவித்தார். அரசமைப்புச் சட்டத்தின் காவலர் மற்றும் முப்படைகளின் தலைவர் என்ற அடிப்படையில் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது என்று முன்னாள் ராணுவத்தினர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டனர்.
அதே சமயம், ஒரு சில ராணுவ தளபதிகள் மறுப்பு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, இந்தக் கடிதம் போலியானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ராணுவ தளபதிகள் பெயர்களை அவர்களின் ஒப்புதலின்றி இணைத்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.