ஹைதராபாத்: வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக தெலங்கானா மாநில பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத் தொகுதி ஒரு வித்தியாசமான காரணத்தால் புகழ்பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட 185 வேட்பாளர்களுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் அரவிந்த் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு நான் கொடுக்கும் பூட்டையும் பயன்படுத்தி பூட்ட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது அங்குள்ள அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.