உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம், திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் தேர்தல் பரப்புரைகளும் சூடு பிடித்துள்ளன. ஒவ்வொரு கட்சியின் முக்கியத் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் முழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், உத்தரப்பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், தேவையற்ற முறையில் வெறுப்புணர்வை தூண்டு விதமாக பேச்சுக்கள் அமைந்ததன் காரணத்தால், யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய 72 மணிநேரங்களும், மாயாவதி பிரசாரம் செய்ய 48 மணிநேரங்களும் தடை விதித்து தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த தடைக்காலம் செவ்வாய்கிழமை (ஏப்.16) அதிகாலை 6 மணிமுதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.